Tuesday, February 9, 2010

காதலர் தின ஸ்பெஷல்...


ஒரு அதிகாலை பொழுது
நீ நீராடிவிட்டு
பாவாடை தாவணியில்
தலையில் நீர் சொட்ட
உன் விட்டு வாசலில் கோலம்
போட்டு விட்டு ஓடிப்போனாய்
அன்று
நம் பள்ளி வரலாற்று
தேர்வில் வினா ஒன்று
உலகின் மிகச்சிறந்த ஓவியம்
எது என்று ?
சற்றும் தயங்காமல் எழுதினேன்
என் எதிர் வீட்டு கோலம்
என்று !!

******************************

அழகாய்தான்
இருந்தது.
நம் பள்ளி
பேருந்து நிறுத்தம் !

ஒரு வேலை ...
நாம் இருவரும் இருந்ததாலோ?...

பக்கத்தில் அமர்ந்து
பல முறை பேசியிருக்கிறோம் ..!
சில நேரம் சிரிப்பாய் ..
சில நேரம் சினமாய்...

ஏனோ
அப்போதெல்லாம்
நம்மை சுற்றி
நிறையப்பேர் இருந்தாலும்
"வெறிச்சோடி" இருப்பது போல்
ஒரு உணர்வு....

இதோ !
இன்று .....அந்த
இன்பமான நினைவுகளை
இதயத்தில்
சுமந்தவனாய் ....
அதே பள்ளி நிறுத்தத்தில்
வந்து சற்று நேரம்
அமர்ந்துவிட்டு செல்கிறேன் ...

ஏனோ இப்பொழுது
என்னை சுற்றி யாருமே இல்லையெனிலும்
நெரிசலாய்...நெருப்பாய்
ஒரு உணர்வு.......

******************************
இது ஒரு மீள்பதிவு

Saturday, February 6, 2010

அசல்- அசத்தலான விமர்சனம்


விமர்சனம் படிப்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்..நான் தீவிர விஜய் ரசிகனோ அல்லது அஜித் ரசிகனோ இல்லை..இது ஒரு நடுநிலைவாதியின் விமர்சனம் மட்டுமே... நான் ஒரு சூர்யாவின் ரசிகன்...

ஏகனின் படுதோல்விக்கு பின் அஜித்தின் 49 வது படம்..சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,சரணின் இயக்கத்தில்,பரத்வாஜின் இசையில் வெளிவந்துள்ள படம் "அசல்"

படத்தின் கதை:-


அப்பா அஜித் தன் முதல் மனைவிக்கு பிறக்கின்ற குழந்தைகளை நம்பாமல் இரண்டாம் மனைவிக்கு பிறக்கின்ற அஜித்திடம் தனது முழு சொத்தினை ஒப்படைக்கிறார். சொத்துக்கு ஆசைப்பட்டு அவர்கள் அப்பாவை கொன்றுவிட்டு தன் தம்பியையும் கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.அவர்களிடம் இருந்து அஜித் தப்பித்து சொத்தை மீட்டாரா இல்லையா என்பதே மீதிக்கதை.....

சமீரா ரெட்டி அஜித்தின் எடுபுடியாக வருகிறார்...சில நேரங்களில் கவர்ச்சி..மற்றபடி சொல்ற மாதிரி ஒன்றும் இல்லை..

பாவனா சித்திரம் பேசுதடி படத்துக்கு பிறகு இப்போ தான் பார்க்க அழகாக இருக்கிறார்..தமிழக சினிமாவின் வழமை மாறாமல் லூசுப்பெண்ணாக அறிமுகமாகி இறுதியில் அஜித்தை மணக்கிறார்..

பிரபு தியேட்டரில் தெரிந்தார்.. தியேட்டரை விட்டு நான் வெளியே வந்த பிறகு அவர் எதுக்காக வந்தார் எதுக்காக போனார் என்று தெரியவில்லை..

படத்தில் வில்லன்கள் மிகப்பெரிய காமெடி..

பரத்வாஜின் இசை பாட்டு கேட்கும் போது இருந்த "டொட்டொயிங்" திரையில் பார்க்கும் போது சுத்தமாக இல்லை..

பிரசாந்த். படத்தின் எழுத்து போடும் போதே பாரிஸின் அழகை மிகவும் அருமையாக காட்டியுள்ளார்..பல இடங்களில் இவரது உழைப்பினால் படம் தூக்கம் வராமல் போகிறது...

ஆண்டனியின் எடிட்டிங் சூப்பர்...( ஆயிரத்தில் ஒருவன் 3.15 மணி நேரம் பார்த்த எனக்கு இந்த படம் 2 மணி நேரத்தில் முடிந்தது மிகவும் சந்தோஷம்)

சரண் கடைசியாக மோதி விளையாடிய சரண் இப்படத்தில் ரொம்பவே மோதியுள்ளார் திரைக்கதையுடன்...

அஜித்
இன்னும் எத்தனை நாளைக்கு தாங்க இவரை நடக்கவைப்பீங்க...படத்தில் மனுஷன் நடக்கிறார் நடக்கிறார் நடந்து கொண்டே இருக்கிறார்...இவர் நடப்பதை பார்த்தால் வெளிநாடு செல்ல விமானம் எல்லாம் தேவையில்லை..நடந்தே போய்விடுவார். நடிப்பு என்று சொன்னால் அப்பா அஜித் ஆக வரும் காட்சியில் இறக்கும் போது உள்ள காட்சி மட்டுமே.. டொட்டொயிங் பாட்டுக்கு அவரது டேன்ஸ் என்னை வியக்கவைத்துவிட்டது..வேணாம் தல..இந்த விபரீதபரீட்சை..படத்தில் நீங்க பேசாட்டாலும் உங்க கூட வருகிற சில அல்லக்கைகள் எப்போது பார்த்தாலும் தல தல அப்படின்னு கூவுறாங்களே ..ஏன் இந்த கொலைவெறி...

படத்தின் பிளஸ்:-

1.அஜித்தின் நடை..
2.பாவனாவின் அழகு..
3.சமீராவின் சிறிதளவு கவர்ச்சி..
4.கேமராமேன் பிரசாந்த்..

படத்தின் மைனஸ்:-


1.சரண்
2.பரத்வாஜ்
3.படத்தின் திரைக்கதை


1. நான் மதுரை சென்று பார்க்கும் இரண்டாவது படம்..முதல் படம் சீனா ஐயாவின் தயவால் இனாமாக பார்க்கமுடிந்தது..இரண்டாவது படமும் .சி.தான்.. எனது கம்பெனியின் ஓனர் தீவிரமான அஜித் ரசிகர் என்பதால் முழுவதும் அவரின் செலவு..

2.இவ்வளவும் படித்துவிட்டு படம் பார்க்கலாமா வேணாமா என்று எல்லாம் கேட்கக்கூடாது..கண்டிப்பாக அஜித்தின் நடைக்காக ஒரு முறை பார்க்கலாம்...

அசல்:- கம்மியான அசத்தல்

Friday, January 22, 2010

என்னவளுக்காக...


எனக்கு எது பிடிக்கும்,
எது பிடிக்காது,
என்று தெளிவாய் உன்னிடம்
சொல்லத்தெரிந்த எனக்கு
ஏனோ தெரியவில்லை...
"நான் உன்னை காதலிக்கிறேன்"
என்ற வார்த்தையை மட்டும்
சொல்லத் தெரியவில்லை...

நான் எழுதும் ஒவ்வொரு
கவிதையையும் படித்துவிட்டு,
ஒரு புன்சிரிப்புடன்,
இந்த கவிதைக்கு பின்னால்
"யாரோ ஒரு பெண் இருக்கிறாள்"
என்கிறாய்..அது நீ தான்
என்று உனக்கு தெரிந்தும் கூட..

தோழிகளோடு கலகலப்பாக
சிரித்துக்கொண்டு செல்கையில்,
என்னை பார்த்ததும்
ஏன் அமைதி கொள்கிறாய்..
அதை பார்த்தபின் தெரிந்துகொண்டேனடி
"நீயும் என்னைக்காதலிக்கிறாய்" என்பதை...!!!

நீ என்னை கடந்து செல்லும் போதெல்லாம்
உன் கொலுசு கூட என்னை பார்த்து
சிணுங்குகிறது..
ஆனால் நீ மட்டும்...!!!!

முற்றுப்புள்ளி வைக்காமல் தான் முடிக்கிறேன்
ஒவ்வொரு கவிதையும்..!!
உயிருள்ள காலம் வரை
வற்றிப்போய் விடுமோ
உன் நினைவுகள் என்னிலிருந்து...!!!!

Thursday, January 21, 2010

தனிமையின் துயரம்..


உனக்காக நான்,
எனக்காக நீ,
உன்னில் நான்,
என்னில் நீ,
என நாம் இருவரும்
நம்மை மறந்து,
நம் காதலினால் வயப்பட்டிருந்த காலத்தில்
காற்றுகூட புக முடியாமல்
இருவரும் நெருக்கமாய்
அமர்ந்து இருக்கிறோம்..

இருப்பினும்,
அந்த இடைவெளிக்குள்ளும்
அனுமதி வாங்காமலேயே,
வந்து அமர்கிறது காதல்....

பின் ஒரு நாளில்
கருத்து வேறுபாட்டின்,
கணத்த வேர்களுக்கு,
பால் ஊற்றியபடி,
பயணப்படுகிறது,
பக்குவமடையாத காதலும்,
பக்குவமடைந்த தலைக்கணமும்....

பேசி தீர்ப்பதென,
முடிவு செய்யப்பட்டு,
இருவரும்
கூடிய சந்திப்புகளில்,
மௌனமாய்,
இடைவெளி விட்டு,
அமர்ந்திருக்கிறோம்,
காதலுக்காக....